Monday, July 20, 2009

ராஜ மகன் நீ அன்றோ













ஊரார் மலடி என
கூடியிருந்து
குற்றம் சொல்லாமல்
ஓடி வந்து என்வயிற்றுதித்த
ராஜ மகவே
வாடா உனக்கொரு
ஆசை முத்தம்
தாறேன்...



தேசம் எல்லாம்
சுற்றி வேண்டாத
சாமியில்ல
நாள் இழுத்து நாவிழுத்து
வேண்டிய வேண்டலுக்கு
வேந்தன் என வந்த
வெற்றித்திலகமடா நீ
எனக்கு...



ஊர்முழுக்க உறவிருந்தும்
ஒட்டி உறவாட
பாசம் இருந்தும்
நான் இருந்தேன் தனியாய்
நீ வந்தாய் என் துணையாய்
இனிய மகனே...



பத்து மாதம்
உனைச்சுமக்க
பட்ட வேதனை
பெரிதன்று உனை
பார்த்துப்பார்த்து
நான் மகிழ
பார்வந்த என்
பார் வேந்தன் நீ
அன்றோ...



எனக்கினி என
ஒன்றும் வேண்டேன்
எனக்கொரு தாய்
என்ற அந்தஸ்து
தந்த உன்னை
ஊட்டி வளர்க்க
ஒருபடி ஆயுள்
வேண்டி நிற்பேன்
என் மகனே!

No comments: